யட்சி - யட்சன்


 யட்சி - யட்சன்


"Every part of the cosmos 

draws towards its mate..!" என்று ரூமியின் கவிதை ஒன்று உண்டு. இதற்கு மிகப்பொருந்தும் ஒற்றைச்சொல்தான் யட்சி - யட்சன். யட்சி என்றால் கண்ணுடையவள், இரவில் கண்ணுடையவள் என்று பொருள். இதே ஆண்பாலுக்கென்றால் யட்சன். கண்ணுடையவன், இரவில் கண்ணுடையவன் என்று பொருள்.


இரவு என்பது எல்லா பொருளையும் தின்று செரித்துவிடும் ஒன்று. இரவினால் செரிக்கமுடியாத ஒன்றே ஒன்று ஒளி. ஒளியை மட்டும் செரிக்கமுடியாமல் வெளித்தள்ளிவிடும். 


உலகின் எல்லா மனித உயிருக்கும் கண்ணிருக்கிறது. அப்புறம் ஏன் கண்ணுடையவள் என்பதற்கு ஒரு தனிச்சொல்? எந்த மனிதனுக்கும் இருட்டில்/இரவில் கண் தெரியாது. அப்புறம் ஏன் இரவில் கண்ணுடையவள் என்று ஒரு சொல்?


ஒவ்வொரு மனிதருக்கும் வெளியே காட்டி வெளிப்படும் ஒன்றும், உள்ளே மறைத்துவைத்திருக்கும் ஒன்றும் இருக்கும். உள்ளிருப்பதென்பது இருளுக்குள் கிடப்பது. உதாரணத்திற்கு, யாரிடமும் குரலுயர்த்திகூட பேசாத, ஒரு ஆழ்ந்த உணர்வுக்கு அவனிடம் வார்த்தைகள் தொலைந்து கண்ணீரே மிஞ்சும் ஒரு ஆண் இருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஊரிலுள்ள பெண்கள் அவனை கோழை என்று சொல்லும்போது, ஒருத்திக்கு மட்டும் அவனுக்குள் யாரையும் வெறுக்கத்தெரியாத அன்பு இருப்பதும், அதனாலே அவன் அப்படி நடந்துகொள்வதும் தெரியும். அவள்தான் அவனுடைய யட்சி. அவன் வெளிக்காட்டாத இருளுக்குள் இருக்கும் அவனின் இயல்பை அவள் மட்டும் காணுவாள். அந்த இருளுக்குள் இருப்பதை கண்கொண்டு காணும் அவள்தான் அவனின் யட்சி. அலங்காரங்களற்று இருக்கும் அவன் ஆண்மை அவளுக்கு மட்டும் தெரியும். கொண்டாடுவாள்.


முன்னிரவு தொடங்கிய காமக்கழிவிறக்கத்தில், அடுத்த நான்கு மணிநேரத்தில் இரண்டு பேரோடு கட்டிலைப்பகிர்ந்தவளுக்கு... விடியாத சாமத்தின் பின்னிரவில் அடுத்து வந்தவனுக்கும் சிரிப்பை வெளிக்காட்டியபோது, உள்ளிருந்த அவள் வலிக்கு இரண்டு முத்தங்களைமட்டும் தந்து, அவளோடு கைகோர்த்து கடைவீதிக்கு கூட்டிப்போய் கண்ணோடு கண்பார்த்து, தேநீர் பருகி, மெல்லிய புன்னகையோடு "போயிட்டு வரேன்" என்ற வார்த்தையோடு விடைபெற்ற ஒருவனை... அடுத்தடுத்தநாளின் அதே நேரத்தில் அந்த பெண் எதிர்பார்ப்பாளேயானால் அவன்தான் அவளின் யட்சன்.


ஏன் கணவன் மனைவிக்குள் சண்டையிட்டு பிரிவையோ அல்லது ஒரு வீட்டுக்குள் இருவேறு ஆளாகவோ இருக்கிறார்கள் என்று புரிகிறதா? ஏன் சில காதல்கள் ஏற்கப்படுவதில்லை, சில காதலர்கள் தோற்கிறார்கள் என்று புரிகிறதா? திருமணம் தாண்டிய உறவு ஏன் ஏற்படுகிறது என்று புரிகிறதா? 


ஒவ்வொரு முறையும் ஒரு யட்சனுக்கு ஒரு யட்சி என்றே பேரியற்கையின் படைப்பு நிகழும். ஆனால், உலகச்சிக்கலில் ஒரு யட்சி ஒரு ஆணை திருமணம் செய்துகொள்கிறாள். ஒரு யட்சன் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான். அவர்களுக்கு தெரியாத இருட்டின் பக்கங்களை அவர்களால் ஏற்கமுடியாதபோது விலகுகிறார்கள். நீங்கள் சந்தித்தது உங்கள் யட்சியை அல்லது யட்சனை என்றால் அவர் உங்களைவிட்டு விலகவேமாட்டார். விலகினாரென்றால் உங்கள் யட்சியோ யட்சனோ அவரில்லை. அதற்காக வருந்தும்தேவையும் உங்களுக்கில்லை என்பதை உணருங்கள். 


ஏன் காதல் உயர்வானதாக உள்ளதென்பது இப்போது புரிகிறதா? உங்கள் யட்சியையோ யட்சனையோ கண்டடைய இருக்கும் ஒரே வழி காதல்தான். காதல்தோல்வி என்ற வார்த்தையே அபத்தமானது. காதல் தோற்றால் உலகம் இல்லாமல் போய்விடும். காதலர்கள் தோற்பார்கள் அவ்வளவு தான். 


"அன்பை, காதலை 

ஒரு பேரரசனைப்போல

கொடுங்கள், பெறுங்கள்...

பிச்சைக்காரரைப்போலல்ல" என்பார் ரூமி. 


காத்திருங்கள்... உங்கள் வாழ்வின் ஏதாவது ஒரு புள்ளியில், எப்போதாவதொரு நொடியில் உங்கள் யட்சியை/யட்சனை நீங்கள் சந்திக்கத்தான் போகிறீர்கள்.


"ஒவ்வொரு மாதுளை முத்துக்களையும்

அதன் தொலிக்குள் வைத்த சக்தி எதுவோ

அதற்கு தெரியும் உன்னை எங்கு சேர்க்கவேண்டும் என்பது" இதுவும் ரூமியின் கவிதையேதான்.


யட்சி மிக நுணுக்கமான வார்த்தை. உங்கள் இருளுக்குள் இருப்பது அவளுக்கு மட்டுமே தெரியும்.


பேரன்பு..!


- பரிதி


❤️

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை? - பரிதி

கவிதை - அன்பு என்பது... - பரிதி