பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை? - பரிதி


பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை?

[பொதுவாக எனக்கிருக்கும் சில பழக்கங்களில் ஒன்று தனிமையில் இருக்கும்போது கண்களை மூடிக்கொண்டு மனதுக்கு பிடித்த யாரோடாவது மனதுக்குள் பேசத்தொடங்குவேன். எப்போதாவது நிச்சயம் உங்களோடும் பேசியிருப்பேன். பெரும்பாலானோருக்கு இது ஒரு பழக்கம்தான். அப்படி ஒரு முறை திருவள்ளுவரோடு பேசியபோது திருக்குறளில் எனக்கிருக்கும் ஒரு சந்தேகத்தை அவரிடம் கேட்டதற்கு அவர் தந்த பதில்தான் இந்த கட்டுரை…]
                            
“ஐயா, உலகப்பொதுமறை தந்த உங்களுக்கு வாழ்வியலின் சகல விடயங்களையும் பேசவேண்டிய தேவை இருக்கும் என்பது எனக்குப்புரிகிறது. ஆனால், உலகின் நடைமுறைகளைத்தாண்டி ஞானத்தின் பாதையை அறிந்த நீங்கள் ஒன்றை தவறாக எங்களுக்கு சொல்லிச்சென்றிருப்பதாக நான் உணர்கிறேன்” என்றேன் நான்.
“அப்படி என்னப்பா, கொஞ்சம் எனக்கு விளக்கமாகச்சொல்…” என்றார் திருவள்ளுவர்.
247வது குறளாக வரும்…
அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு
என்ற குறளில் ‘அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை’ என்கிறதில் எந்த ஐயமும் இல்லை, அதில் தெளிவையும் தந்திருக்கிறீர்கள். ஆனால், பொருள் அதாவது காசு இல்லாதவனுக்கு இந்த உலகம் இல்லை என்று சொல்லிச்சென்றிருக்கிறீர்களே… இது சரியா? நடைமுறை உலகத்தை நாங்கள் தெரிந்துகொள்வதற்கு நீங்கள் எதற்கு? அதை அனுபவத்தின் வழியாக நாங்களே தெரிந்துகொள்வோமே? என்று கொஞ்சம் கோவமாக முடித்தேன்.
தான் வாழ்ந்து பெற்ற அனுபவத்தை திரட்டி தனக்கே உரிய மென்சிரிப்போடு ஒரு பதிலைத்தந்தார் வள்ளுவர்… “நீயே கேட்கிறாய், ஞானத்தின் திசையறிந்தவன் பொருளின் வகை அறியமாட்டானா என்று. பொருளில்லாத ஞானியர்கள் போற்றத்தகுந்த வாழ்வை இந்த உலகில் வாழ்ந்ததையும், வாழ்ந்துகொண்டிருப்பதையும், இன்னும் வாழப்போவதையும் நான் அறியாதவனா? “பொருளைப்புரிவார்க்கே இந்தக்குறள் வசப்படும்” என்றவர் சென்றுவிட்டார்.
கண்மூடிக்கிடந்தவன் கண்கள் திறந்தேன். கிட்டத்தட்ட இரண்டு வாரம் வள்ளுவன் என்னுள் சொன்ன “பொருளைப்புரிவார்க்கே இந்தக்குறள் வசப்படும்” என்ற வார்த்தைகளை அசைபோட்டபிறகு எனக்கு தெளிந்த பொருள் இதுதான்…
ஓஷோ சொல்வார், “சொல் எனது சிந்தை உனது” என்று. உண்மைதானே சொல்லுக்குத்தானே சொல்லியவர் பொறுப்பு, அதுபற்றிய சிந்தனையைச்செய்தவர் நாம்தானே? அதற்கு நாம்தான் பொறுப்பு.
உலகில் பெரும்பாலானோர் ஒரு சொல்லை, சொல்லியவரின் மனநிலையிலிருந்து புரிந்துகொள்வதே இல்லை. என்னை நீங்கள் தவறு என்று சொன்னால்கூட உங்கள் நிலையிலிருந்து பார்த்தால் அது சரியாகத்தானே இருக்கும். ஒருவேளை நான் எனது நிலையை உங்களுக்கு சொல்லிப்புரியவைத்தால், உங்களின் பார்வை மாறலாம்.
திருவள்ளுவர் ஓர் உலகளந்த ஞானி. அவன் சொல் எனக்குப்புரியவில்லை என்று அவனையே குற்றம் சொல்லியது என் தவறு. அந்த குறளுக்கு விளக்கம் தந்தவர்கள் அவரவர் மனநிலையிலிருந்தே தந்திருப்பதாகவும் உணர்கிறேன்.
திருவள்ளுவர் தனது 1330 குறளில் 132 அதிகாரங்களை எழுதியிருக்கிறார். ஒரே அதிகாரத்தில் 20 குறளை எழுதியிருக்கிறார். அது குறிப்பறிதல் எனும் அதிகாரமாக பொருட்பாலில் அமைச்சியல் எனும் பாயிரத்தில் 10 குறளாகவும், காமத்துப்பாலில் களவியல் எனும் பாயிரத்தில் 10 குறளாகவும் வரும். ஆக, மொத்தம் 133 அதிகாரங்கள்.
இன்றைய உலகில் உடைமை(Property) என்றால் உயிறற்ற அசையும், அசையா பொருட்களையே குறிக்கும். சிலர் மனைவி, கணவன், அம்மா, அப்பா, உடன்பிறப்புகளையே உடைமையாக எண்ணுவதும் உண்டு. மார்க்சியத்தின் அடிப்படையில் இதுவும் ஒருவகையில் சரியே. இருக்கட்டும். ஆனால், இந்த பொருட்கள் இல்லாத மனிதனுக்கு உலகம் இல்லையென்று வள்ளுவன் சொல்லியிருப்பானா என்பதே கேள்வி. வள்ளுவன் உடைமை என்று எதையெல்லாம் சொல்லுகிறான் என்று கொஞ்சம் பாருங்கள்… அன்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, அருளுடைமை, அறிவுடைமை, ஊக்கமுடைமை, ஆள்வினையுடைமை, பண்புடைமை, நாணுடைமை என்று கிட்டத்தட்ட பத்து வகையான உடைமைகளை பேசியவன் பொருளை உடைமை என்று சொல்லி ஒரு அதிகாரத்தைக்கூட எழுதவில்லை.
உலகமே ஏன் வள்ளுவனைக்கொண்டாடுகிறது என்பதற்கு எனது சான்றே இதுதான். ஒரு மனிதனுக்கு சொத்தாக, உடைமையாக(Property) எதுவெல்லாம் இருக்கவேண்டும் என்று வள்ளுவன் சொல்கிறான் என்று பாருங்கள். அன்பை சொத்து என்கிறான், அடக்கத்தை சொத்து என்கிறான், ஒழுக்கத்தை சொத்து என்கிறான், பொறை அதாவது பொறுமையோடு இருப்பதை சொத்து என்கிறான், அருளை சொத்து என்கிறான், அறிவை சொத்து என்கிறான், ஊக்கத்தை சொத்து என்கிறான், ஆள்வினை ஆங்கிலத்தில் Maniy Effort என்பார்களே முயற்சி செய்வதை சொத்து என்கிறான், பண்பை, நாணத்தை சொத்து என்கிறான். ஆனால், பொருளை சொத்து என்று சொல்லி ஒரு அதிகாரத்தைக்கூட எழுதவில்லை. அதனால்தான் வள்ளுவம் உலகப்பொதுமறை என்றானது.
சரி, இத்தனை உயரத்தைப்பேசியவன் பொருள் இல்லாதவனுக்கு இந்த உலகம் இல்லை என்று பேசியிருப்பானா? இரண்டு பதிலை உங்களுக்கு தருகிறேன்.
·        ஒன்று, வள்ளுவன் மேலே சொன்ன பத்து வகையான உடைமை அதாவது சொத்து அதாவது பொருளை இல்லாதவனுக்கு இந்த உலகம் இல்லை என்றே சொல்லியிருக்கிறான்.
·        இரண்டாவது, தமிழில் பொருளுக்கு கருத்து என்ற ஒரு பொருளும் இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் கருத்து இல்லாதவனுக்குத்தான் இந்த உலகம் இல்லை என்று பேசியிருக்கிறான்.
எப்படி?
ஒரு கணக்குக்காக சொல்கிறேன், வள்ளுவன் வாழ்ந்த காலத்தில் அவனோடு ஒரு இலட்சம் பேர் வாழ்ந்திருப்பார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த ஒரு இலட்சம் பேரில், கிட்டத்தட்ட நூறு புலவர்கள் இருந்திருப்பார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். மீதமிருக்கும் 99900 மக்களும் அப்போது நிறைய வார்த்தைகளை அடிக்கடி பேசியிருப்பார்கள்தானே? ஆனால், இன்றைக்கு அந்த மக்கள் யார்? அவர்கள் பேசியது என்ன? என்பது நமக்கு தெரியாது. அந்த நூறு புலவர்களில் புறநானூற்றுப்புலவர்களும் இருக்கிறார்கள். அதில் நம் எல்லோருக்கும் தெரிந்த ஔவையாரும் ஒருவர். (அறிவிலும், அனுபவத்திலும், வயதிலும் முதிர்ந்தவரை ஔவை எனும் பொதுச்சொல்லால் வழங்கியிருக்கிறது தமிழ். காலத்தால் பல ஔவை இருந்ததாகவும் சொல்லப்படுகிறது).
இத்தனைபேர்களில் ஔவையும், வள்ளுவனும் நம்மோடு இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்களே எப்படி?
அவர்களிடம் கருத்து இருந்தது, இந்த உலகம் அவர்களுக்கு சொந்தமானது..!
அவர்கள் காலத்திலேயே வாழ்ந்த பல மனிதர்களுக்கு கருத்து இல்லை. அதனால், அவர்களுக்கு இந்த உலகம் இல்லாமல் போனது.
காலத்தின் வழிவழியே கோடானுகோடி மனிதர்கள் எண்ணிலடக்கமுடியாதபடிக்கு இந்த உலகத்தில் வந்துபோயிருக்கிறார்கள், இருந்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் வருவார்கள். ஆனால், எவனிடத்தில் கருத்து இருக்கிறதோ அவனுக்கே இந்த உலகம் சொந்தமாகும்.
சாக்ரடீஸ் வந்தான், அவனிடம் கருத்து இருந்தது, இந்த உலகில் அவன் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறான். பிளேடோ வந்தான், அவனிடம் கருத்து இருந்தது, இந்த உலகில் அவன் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறான். அரிஸ்டாட்டில் வந்தான், அவனிடம் கருத்து இருந்தது, இந்த உலகில் அவன் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறான். இன்னும் இப்படி சிலரைக்குறிப்பிடலாம் இளங்கோவன், கம்பன், பாரி என்ற வரிசையில் சேகுவேரா, காஸ்ட்ரோ, மண்டேலா, பாரதி, காமராசர், கக்கன், நம்மாழ்வார், திலீபன், பிரபாகரன் என்பவர்கள் மட்டுமல்ல “எங்கப்பா அதச்சொன்னாரு, எங்க மாமா அதச்சொன்னாரு ஆனா இப்ப அவரு எங்ககூட இல்ல…” என்று கருத்துகொண்ட அத்தனை மனிதருக்கும் இந்த உலகம் உண்டு. அப்படி எந்த கருத்தும் இல்லாமல் வந்தோம், திண்றோம், இருந்தோம், செத்தோம் என்ற கருத்து(பொருள்) இல்லாத மனிதர்களுக்கு இந்த உலகம் இல்லை என்கிறான் வள்ளுவன். அது எந்த கொம்பாதி கொம்மனாக இருந்தாலும் அவனுக்கும் இதே விதி தான்.
ஒரு பைசா காசில்லாது வாழ்ந்த சித்தர்களை இந்த உலகம் இன்றும் வாழவைத்துக்கொண்டிருக்கிறது. அகத்தியன், திருமூலன், தொல்காப்பியன், பவனந்தி முனிவர், சிவவாக்கியன், பட்டினத்தார், ஏசு, நபி, ரூமி இவர்களிடம் என்ன சொத்து இருந்தது?
அவர்கள் வாழ்ந்த காலத்தில் சகல சொத்துகளோடு மட்டும் வாழ்ந்த அரசர்களின் பெயரைச்சொல்லுங்கள் பார்க்கலாம். உலகத்தில் இருப்பதற்கும் வாழ்வதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை முதலில் உணர வேண்டும் என்பார் குன்றக்குடி அடிகளார்.
உங்களிடம் கருத்து இருந்தால் இந்த உலகம் உங்களுக்கு சொந்தமானது. இரவாப்புகழோடு இந்த உலகில் நீங்களும் வாழ்வீர்கள். அவ்வளவுதான்.
வான்புகழ் கொண்ட திருவள்ளுவன் தந்த திருக்குறளை, எங்கே ஒருமுறை மீண்டும் படியுங்கள்…
அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு
இன்னும் ஒருமுறை படியுங்கள்…
அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்(கருத்து)இலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு

மெய்ப்பொருள் காண்பது அறிவு..!
            பரிதி
                                      இறைவி சிந்தனைக்களம்

கருத்துகள்

  1. அருமையான ஆராய்ச்சி
    கருத்துடைய வாழ்க்கை வாழ முயற்சியில்

    பதிலளிநீக்கு
  2. பொருள் இல்லை என்றால் நீங்கள் இல்லை. பொருள் என்பது அது ஒரு என்றும் அழியாத வஸ்து. அதனால் தான் நீங்கள் உணரப்படுகீர்கள்.for more information please call 9790721591

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யட்சி - யட்சன்

கவிதை - அன்பு என்பது... - பரிதி